மேற்கு வங்காளத்தில் துர்கா சிலை கரைப்பின்போது படகு கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் விமரிசையாக நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்கள் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து பூஜைக்கு வைக்கப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

அதன்படி, அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பெல்டங்காவில் துர்கா சிலை ஒன்றை ஆற்றில் கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அங்கு 2 படகுகளில் அந்த சிலையை வைத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென அந்த படகுகள் கவிழ்ந்தன.

இதனால் அந்த படகில் இருந்த 6 பேரும் நீருக்குள் சிலைக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகி விட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த உள்ளூர்வாசிகளும், போலீசாரும் ஆற்றில் இறங்கி அவர்களை மீட்டனர்.

உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும் மாயமானவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.