விமானத்தில் தங்கம் கடத்தி வந்த விமான ஊழியர் உட்பட 5 பேர் கைது

ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் எந்த பயணியிடமும் தங்கம் சிக்கவில்லை. இதனால் விமானத்திற்கு உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள். அங்கும் தங்கம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் விமான நிலையத்திற்கு வெளியே, கடத்தல்காரர்களுக்கு கைமாற இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே வாகனம் நிறுத்தும் இடத்தில் மறைந்திருந்து அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஏர் இந்தியா விமான ஊழியர் கோபிநாத்(வயது 50) ஒரு பையுடன் வெளியே வந்தார்.


அங்கிருந்த மூன்று பேரிடம் அந்த பையை கொடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த விமான ஊழியரையும், அந்த மூன்று பேரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் விமான ஊழியர் கொடுத்த பையை வாங்கி சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 2½ கிலோ தங்கம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், விமான ஊழியரிடம், இந்த பையை கொடுத்த பயணி யார் என்று விசாரணை நடத்தினார்கள்.

அவர் அந்த பயணி குறித்து தகவல் கூறவே, விமான நிலையத்துக்கு வெளியே நின்ற அந்த பயணியையும் பிடித்தனர். பின்னர் விமான ஊழியர் கோபிநாத் உள்பட ஐந்து பேரையும் அதிகாரிகள் கைது செய்து 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.