தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சம் கையெழுத்து பிரதிகள்: முதல்வரிடன் ஒப்படைத்தார் எல்.முருகன்

தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேசிய கல்வி கொள்கை எந்த அளவிற்கு மாணவர்களுக்கு பயன் உள்ளது. நமது மாணவர்களை சர்வதேச தரத்திற்கு எப்படி உயர்த்தக்கூடியது என்பதை எடுத்துக்கூறி சுமார் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இதேபோன்று, துணை வேந்தர்கள், ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் என கல்வியாளர்கள் மத்தியில் தேசிய கல்வி கொள்கை ஆதரவு கூட்டம் நடத்தப்பட்டு 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினார்.

பின்னர் தமிழக பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் எல்.முருகன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை ஒப்படைத்தோம்.

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக மத்திய அரசாங்கம் 59 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி நீடித்துக்கொண்டு இருக்கிறது. அது வலிமையான கூட்டணியாக இருக்கிறது என்று கூறினார்.