மதுரை மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று... புதிதாக 61 பேர் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 51 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 24 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 761 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் நேற்று கொரோனாவால் 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் மதுரையில் இதுவரை 380 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.