மேட்டூர் அணையிலிருந்து கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறப்பு

புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7 ஆயிரத்து 641 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கால்வாயில் தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 104.34 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 104.74 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.