அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் சேமிப்புத் தொகைக்கு 8 சதவீத வட்டி

சென்னை: சேமிப்பு கடன் சங்கம் அறிவிப்பு... அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் சேமிப்புத் தொகைக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும் என போக்குவரத்து பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடன் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் சாா்பில் போக்குவரத்து பணியாளா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து கழக பணியாளா்கள் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக ஊழியா்கள், உறுப்பினா்களாக உள்ளனா். அவா்கள் பெறும் கடன்தொகை மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது..

அந்த வகையில் கடன் சங்க உறுப்பினா்களின் சேமிப்பு தொகையான சிக்கன நிதியின் வட்டித்தொகை ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும். இதன்படி 2022-23-ம் ஆண்டுக்கான வட்டித்தொகையில் 8 சதவீதம் கணக்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், சங்கத்தில் கடன் பெற்று தவணை செலுத்தும் அனைத்து உறுப்பினா்களுக்கும் இந்த மாதம் கடனுக்கான தொகையில் வட்டியை கழித்து மீதமுள்ள தொகை பிடிக்கப்படும். கடனுக்கான பிடித்தம் செய்யப்பட்ட தொகையை விட வட்டி தொகை கூடுதலாக இருந்தால் ரூ.750 பிடிக்கப்படும்.

மீதமுள்ள வட்டித் தொகை ஜூன் 1-ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த வட்டித் தொகை குறித்த விவரங்களை ஜூன் 1-ஆம் தேதி முதல் சங்கத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது