கழுத்தில் புல்லட்டுடன் 80 ஆண்டுகளாக வாழும் சீனா முதியவர்

சீனா: கழுத்தில் புல்லட்டுடன் வாழும் முதியவர்... சீனாவைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் சுமார் 80 ஆண்டுகள் கழுத்தில் புல்லட்டுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சீனாவின் ஷெங்க்டான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ ஹி. 95 வயதான இவர், சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த எக்ஸ் ரே முடிவை பரிசோதித்த மருத்துவக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த முதியவரின் கழுத்தில் ஒரு துப்பாக்கி குண்டு இருந்துள்ளது.

தொடர்ந்து முதியவர் ஜாவோ, அவரது மருமகனை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது. ஜாவோ தனது இளமை பருவத்தில் ராணுவ வீரராக இருந்துள்ளார். டீன் ஏஜ் காலத்தில் இரண்டாம் உலக யுத்தத்தில் சீனா ராணுவத்திற்காக போரிட்டுள்ளார். இந்த போரின் போது காயமடைந்த சக வீரரை நதியில் தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார் ஜாவோ.

அப்போது இவர் மீது தாக்குதல் நடைபெற்று காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து 77 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அன்று இவர் கழுத்துக்குள் சென்ற புல்லட், இத்தனை ஆண்டுகளாக இருந்துள்ளது.

90 வயதை தாண்டிய ஜாவோவின் வயது மூப்பை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை வேண்டாம் என அப்படியே அதை விட்டுவிடுவோம் என மருத்துவர்கள் ஆலோசனை தந்துள்ளனர். அவரும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை, அப்படியே விட்டுவிடுங்கள் என்றுள்ளார்.