அர்னாலாவில் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய 5 வயது சிறுமி

மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீஸ்காராக இருந்து வரும் நினாட் மனைவி ஜான்வி. இவர்களது மகள் உர்விக்கு தற்போது 5 வயதாகிறது. இந்நிலையில் உர்விக்கு பிறந்தநாள் தினம் வந்தது. இந்த பிறந்தநாளை கொண்டாட உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டது.

வழக்கம் போல் நண்பர்களுடன் கொண்டாடாமல் பெண் குழந்தைகளை காப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்தாள். அதன்படி நினாட், விரார் அர்னாலா கடலின் நடுப்பகுதியில் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து, நினாட் தனது மகள், குடும்பத்தினருடன் அர்னாலா கடற்கரைக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்த படகு மூலம் கரையில் இருந்து 3.6 கி.மீ. தூரம் கடலுக்குள் சென்றனர். அப்போது அவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து இருந்தனர். உர்வி மனதைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினாள். தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாள்.

உர்வி வெட்டிய கேக்கில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம்பெற்று இருந்தன. மனதைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்தநாளை கொண்டாடிய விதம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.