அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்தி சட்டசபையில் மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அந்த வரிசையில் சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து அதில் அரசு பல்வேறு ஆண்டுகளில் போக்குவரத்தில் வரி விதிப்பு முறைகளை மேற்கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு அதிகரிக்கவில்லை. தற்போது வாகனங்களின் மீது விதிக்கப்படும் வரியிலிருந்து வருமானம் குறைவாக வருகிறது.

அதனால் மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்த தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வது என்று அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

எனவே இதன் படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என்று அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் இழுவை வண்டிகளுக்கு (டிரெய்லர்) ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி அதிகரிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சசதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. அதே போன்று 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது.