திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி

சென்னை: திருமண விழாவில் உயிரிழந்த மாணவர்... சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரைச் சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி. இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது தோழி பூனம் என்பவரது சகோதரியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு நண்பர்களுடன் இவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு சென்ற அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதையடுத்து உணவு சாப்பிட்ட அவர், திருமண ஜோடிக்கு வாழ்த்து சொல்ல வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த அவரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யசாய் ரெட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலையம் போலீசார், சத்யசாய் ரெட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இறந்த மாணவரின் குடும்பத்தார், நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.