தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது ... வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (31.01.2023) 23:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையிலிருந்து கிழக்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும்,

காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.

எனவே இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்| கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.