அனாதரவாக நின்ற மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த மனிதநேய பெண் காவலர்

வேலையும் இல்லை... உறவினரும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் சென்னை அடையாறு பஸ் டிப்போவில் பசியுடன் படுத்திருந்த 65 வயது பெண்ணுக்கு உதவிகரம் நீட்டி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் பெண் காவலர் ஒருவர்.

அடையாறு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் மரியம் புஷ்ப மேரி. இவர் வழக்கம் போல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாறு பஸ் டிப்போவில் படுத்திருந்த 65 வயது தனலட்சுமி பார்த்து அவரிடம் விசாரித்துள்ளார்.

தனலெட்சுமிக்கு சொந்த ஊர் கும்பகோணம். வேலை தேடி சென்னை வந்து ஒரு ஆண்கள் விடுதியில் சமையல் வேலைக்கு சேர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் மெஸ் பூட்டப்பட, ஊருக்குச் செல்லும் முயற்சியில் கோயம்பேடு வந்துள்ளார். ஆனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தங்கம் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் தினமும் தரும் உணவினை சாப்பாட்டு மார்கெட்டிலேயே இருந்துள்ளார்.

கோயம்பேடு மார்கெட்டும் மூடப்பட்டதால் கும்பகோணத்தில் இருந்த கணவரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். கணவரால் சென்னைக்கு வரமுடியாது என்பதால் அடையாறில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்க செய்துள்ளார். ஆனால் அவர்கள் சில நாட்களிலேயே தனலட்சுமியை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். இத்தகவல்களை அறிந்த காவலர் மேரி தனலட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்க வைத்துக்கொண்டார் மேரி.

தனலட்சுமிக்கு தேவையான அனைத்தையும் வழங்கி உள்ளார் இந்த மனித நேயமிக்க காவலர் மேரி. பின்னர் கும்பகோணத்தில் உள்ள தனலட்சுமியின் கணவரை தொடர்பு கொண்டு பஸ் போக்குவரத்து தொடங்கிய பின்னர் அனுப்பி வைப்பதாக தகவலும் தெரிவித்துள்ளார். மனிதநேயத்திற்கு சான்றாக உள்ள காவலர் மேரியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.