சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல் சரக்கு கப்பலுடன் மோதிய விபத்தில் 8 மாலுமிகள் பலி

சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் பயங்கரமாக மோதியது.

இந்த மோதல் காரணமாக எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்த தகவல் அளிக்கப்பட்டவுடன், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர். 15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த விபத்தில் 14 மாலுமிகள் மாயமான நிலையில் 3 மாலுமிகள் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் பல மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை எண்ணெய் கப்பலில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அதன்பின் மாயமான மாலுமிகளை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது எண்ணெய் கப்பலில் இருந்து 8 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 6 மாலுமிகள் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.