கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு

பெங்களூர்: கர்நாடகாவில் 3 நாட்கள் தங்கி சட்டசபை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 24ம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தலைவர் ராஜீவ்குமார் தனது குழுவினருடன் கர்நாடகாவில் 3 நாட்கள் தங்கி சட்டசபை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இதுவரை 400 சட்டமன்றத் தேர்தல்கள், 17 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 16 குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தியுள்ளது.

இதனிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் என்று அம்மாநில மக்கள் நம்ப முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் உட்பட 400 சட்டசபை தேர்தல் என்ற மைல்கல்லை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிறைவு செய்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மூலம் அதிகார பரிமாற்றம் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார்.