சாலையில் சென்று கொண்டிருந்த காரில் ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு

நாமக்கல்: சாலையில் சென்ற காரில் தீ... பரமத்தி வேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவர், தினசரி காரில் ஈரோடு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று வங்கிக்குச் செல்ல தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கபிலர்மலை அருகே சென்றபோது காரில் இருந்து புகை வந்துள்ளது.

இதைப் பார்த்த சுரேஷ் காரை நிறுத்திவிட்டு அருகே உள்ள பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று தீயணைப்பு கருவியை வாங்கி வருவதற்குள் தீ மள மளவென பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் கபிலர் மலையில் இருந்து பரமத்தி மற்றும் வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.