தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் மொத்தமாக 4,829 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 2,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 52 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழப்பு 1,738 ஆக உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் 2,328 பேரும், கடலூரில் 324 பேரும், அரியலூரில் 222 பேரும், செங்கல்பட்டில் 145 பேரும், கோவையில் 146 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு இல்லாமல் இருந்த கிருஷ்ணகிரியில் இப்போது 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய பலருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 0 - 12 வயது வரை 254 பேரும், 13 முதல் 60 வயது வரை 4208 பேரும், 60 வயதுக்கு மேல் 367 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,507 பெண்களும், 3,320 ஆண்களும் அடங்குவர். சென்னையில் அதிகபட்சமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு, மதுரை மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, தூத்துக்குடி மற்றும் வேலூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.