விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே விடுமுறையானதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனகல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள்கூட்டம் அலை மோதியது. பின்னர் அவர்கள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் மணல் திட்டு வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.