ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானை... அலறியடித்து ஓடிய பயணிகள்

திருமலை: ஆந்திரா மாநிலத்தில் ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பயணிகள் பீதி அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் பார்வதிமனியம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக கொத்தவலசை கிராமத்தில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொமரடா மண்டலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது ஒற்றை யானை கண்ணாடியை உடைத்து தாக்கியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் பார்வதிமனியம் ரயில் நிலையத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது.

இதை பார்த்த சில பயணிகள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அந்த யானை சிறிது நேரம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்து விட்டு சென்றது. அதிகாலை நேரம் என்பதால், ரயில் நிலையத்தில் பயணிகள் குறைவாக இருந்ததாலும், ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.