பிரேசிலில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்

தன்னைத் தானே திருமணம் செய்தவர்... பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த டியோகோ ராபெலோ என்பவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை வந்ததால், இருவரும் பிரிந்துவிட்டனர். உடனடியாக திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு மணமகன் டியோகா ஒப்புக் கொள்ளவில்லை. மணமகளே இல்லையென்றாலும் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில், குறித்த தேதியில், தன்னைத் தானே திருமணம் செய்துள்ளார்.

சுமார் 40 பேர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டியாகோ ராபெலோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது:

'எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவழித்தேன். மிகவும் சோகமான அந்த நாளை நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றினேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்' என தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.