உடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்த இளம்பெண் கைது

கோழிக்கோடு: உடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1884 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த 19 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த இளம் பெண் கலா (19) துபாயில் இருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர், தனது ஆடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இளம் பெண் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இளம் பெண்ணிற்காக காத்திருந்த காசர்கோடு மாவட்ட காவல் துறையினர் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது உடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதை அடுத்து இளம் பெண்ணையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்