மருத்துவமனை நிர்வாகம் மீது லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு

மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு... மேற்குவங்கத்தில் கொரோனா பாதித்து இறந்தவரின் உடலை கடைசியாக பார்க்க அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 51,000 லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உறவினர்கள் இறந்து போனால், அவர்களின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்கிற துடிப்பும், ஏக்கமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கடைசியாக ஒரு முறை உறவினர்கள் பார்க்க கூட முடியாது நிலையே இருக்கிறது.

ஏனென்றால், உடல் முற்றிலும் பாதுகாப்பான முறையில் பேக் செய்யப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எப்படியாவது கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டுமென ரத்த சொந்தங்கள் துடிப்பது இயல்பே. இந்த ஏக்கக்தை பயன்படுத்தி மேற்கு வங்க மருத்துவமனை ஒன்று லஞ்சம் பெற்று சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் கடந்த சனிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டட ஹரி குப்தா என்பவர் தனியார் மருத்துவமனையில் இறந்து போனார். ஞாயிற்றுக்கிழமைதான் மருத்துவமனை நிர்வாகம் ஹரிகுப்தா இறந்தது குறித்து அவரின் மகன் சாகர் குப்தாவுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால், ஹரிகுமாரின் குடும்பத்தினர் வேதனையில் கதறி அழுதனர். எப்படியாவது தந்தையின் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டுமென்று சாகர் குப்தா துடித்துள்ளார்.

இதற்காக, மருத்துவமனை நிர்வாகத்தை அணுகிய போது, ஹரிகுமாரின் உடலை காட்ட வேண்டுமென்றால் ரூ. 51,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. பேரத்துக்கு பிறகு 31,000 கொடுத்து தந்தையின் உடலை பார்க்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சாகர் குப்தா போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் ஹரி குப்தா எரியூட்டப்பட்ட மயானத்துக்கு சென்று விசாரித்தார்

அப்போது, போலீஸிடத்தில் வாக்குவாதம் செய்த மருத்துவமனை ஊழியர்கள், ' உங்கள் மூத்த அதிகாரிகளை வந்து பேச சொல்லுங்கள்' என்று திமிராக கூறியுள்ளனர். போலீஸ் அதிகாரியிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அதை வீடியோவாக சாகர் குப்தா பதிவு செய்துள்ளார். உடனே அவரின் செல்போனையும் மருத்துவமனை ஊழியர்கள் பறித்துள்ளனர். பின்னர், ஹரி குப்தாவின் முகத்தை ஒரு முறை கூட சாகர் குப்தாவிடம் காட்டாமல் மயானத்தில் மருத்துவமனை ஊழியர்களே எரித்துள்ளனர் .

ஹரிகுமாரின் விலாசத்தில் குடும்பத்தினர் பெயர் விவரம் இல்லை என்பதால் தாங்களே உடலை எரியூட்டி விட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸில் முறையாக புகாரளிக்க சாகர் குப்தா முடிவு செய்துள்ளார்.