வழித்தவறி சீனப் பகுதிக்குள் சென்ற 5 இளைஞர்களை மீட்க நடவடிக்கை

வழிதவறி சீன பகுதிக்குள் அருணாச்சல பிரதேசம் வாலிபர்கள் 5 பேர் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தியதாகவும் செய்திகள் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் 5 இளைஞர்களும் வழிதவறி சீன பகுதிக்குள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனா ராணுவம் பதிலளித்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறும்போது, “காணாமல் போன 5 அருணாச்சல பிரதேச இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து இன்று சீன ராணுவத்திடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” என்றார்.