மெரீனா படத்தில் நடித்த நடிகர் திடீர் தற்கொலை

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'மெரினா' படத்தில் நடித்த நடிகர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய திரைப்படம் மெரீனா. இந்த படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து இருந்த நடிகர் தென்னரசு என்பவர் குடும்ப தகராறு காரணமாக திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த நடிகர் தென்னரசுக்கு சமீபத்தில்தான் காதல் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் தென்னரசு அடிக்கடி மது போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென இன்று வீட்டில் உள்ள சீலிங் ஃபேனில் மனைவியின் புடவையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் நடிகர் தென்னரசு. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.