நடிகை விஜயலெட்சுமி தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு மாத்திரைகள் சாப்பிட்டு மயக்கம்

மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி நடிகை விஜயலெட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

முகநூலில் சீமான் குறித்து விமர்சித்து வந்த நடிகை விஜயலெட்சுமி, தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மாத்திரைகள் சாப்பிட்டு மயக்கம் அடைந்தார்.
ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக முக நூலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் சீமானின் தாய் குறித்து ஆபாசமாக விஜயலெட்சுமி பேசியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பவர், விஜயலெட்சுமிக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் விஜயலெட்சுமியின் நாக்கு அறுத்து எறியப்படும் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் சீமான் ஆதரவாளர்கள் மற்றும் ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாக கூறி முகநூலில் இறுதி வீடியோ வெளியிட்ட விஜயலெட்சுமி, ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற நடிகை காயத்ரி ரகுராம், விஜயலட்சுமியின் சகோதரி உஷா உதவியுடன் மயக்க நிலையில் காணப்பட்ட விஜயலெட்சுமியை மீட்டு அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து விஜயலட்சுமியிடம் திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமியின் சகோதரி உஷா, தங்களுக்கு பணமோ, பொருளோ தேவையில்லை. நிம்மதியாக வாழவிட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு எதிராக பலமுறை விஜயலெட்சுமி கடுமையான விமர்சனங்களை முகநூலில் முன்வைத்த போதும், ஒரு முறை கூட பொது வெளியில் விஜயலெட்சுமியின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.