இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 118447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48534 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3234 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1454 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12905 பேருக்கும், தமிழகத்தில் 13967 பேருக்கும், டெல்லியில் 11659 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.