தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு

புதுடில்லி : உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு... மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை, ஆக., 10க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அபய் ஓகா, ஜே.பி. பர்திவாலா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு இன்று(ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு, கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவகாசம் அளிக்கும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, ஆக., 10ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அமர்வு தெரிவித்துள்ளது.