திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை; அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

ஆலோசனை நடக்கிறது... ஊரடங்கால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் பல்வேறு துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் தியேட்டர்கள் திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் 150 நாட்களுக்கு மேலாக திரையரங்கங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், பல திரைப்படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் திரையரங்கங்கள் திறப்பது குறித்து வரும் செப்.1ம் தேதி அலோசனை கூட்டம் நடைபெறுவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட 34 தியாகிகளுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட் அமைச்சர் கடம்பூர் ராஜூ தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரையரங்குகள் திறப்பது குறித்து செப்டம்பர் 1-ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கொரோனா பணிகள் குறித்து பா.ஜ.கவினர்‌ குறை சொன்ன நேரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு என்ன வழிமுறைகள் வகுத்து கொரோனா தடுப்பு பணிகளில் செய்ய சொல்கிறார்களோ, அதை வழிகாட்டுதல் படி தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முதல்வர் தெளிவான கருத்தை கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.