வீடு கட்ட உதவி என்று கூறி அஜித் ரசிகரிடம் மோசடி

திருநெல்வேலி: வீடு கட்ட உதவி என்று கூறி அஜித் ரசிகரை ஏமாற்றியதாக புகார் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார்.

அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி தருவதாகவும் சிவா ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதை ஐயப்பனும் நம்பியதால் முதலில் பத்திர பதிவு செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என சிவா கூறியுள்ளார்.

இதை நம்ப வைப்பதற்காக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா என்பவரிடம் பணிபுரியும் சங்கர் என்பவரை சிவா போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் இருபது ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். இதனையடுத்து ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாக 1,10,000 ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் சிவா தங்களை ஏமாற்றியது ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரிக்கு தெரிய வரவே அது குறித்து சிவாவிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மேலும் நடிகர் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் வீடு கட்டி தருவதாக கூறி மோசடி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.