புதுச்சேரியில் நாளை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும்

புதுச்சேரி: ஜூலை 22 ஆம் தேதிக்கு பதிலாக காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி சனிக்கிழமை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில், கனமழையின் எதிரொலியால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் 4 பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


எனவே பள்ளி மாணவர்களுக்கு பருவமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வருகிற ஜூலை 22ஆம் தேதி 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது ஜூலை 22 ஆம் தேதிக்கு பதிலாக காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி சனிக்கிழமை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது.

இதனை அடுத்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் பாயாசம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.