பிரேசிலின் அமேசான் காடுகளில் மரங்களை வெட்டியப்பின் தீ வைக்க 120 நாட்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் முதல் 5 மாதங்களில் அமேசான் காடுகள் அழிப்பு 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் காட்டுத்தீயின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் காடுகளின் அழிவை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தக் கோரி 29 உலகளாவிய நிறுவனங்கள் அனுப்பிய கடிதத்திற்கு
பதிலளிக்கும் வகையில் துணை அதிபர் ஹாமில்டன் மவுராவ் தலைமையிலான மாநாடு
நடைபெற்றது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில்,
அடுத்த வாரம் முதல் காடுகளில் தீவைக்க தடை விதிக்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளில்
ஏற்பட்ட தீவிபத்தை யாராலும் மறக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளை பெரும் அச்சத்தில் இந்த காட்டுத்தீ ஆழ்த்தியது. தற்போது பழைய
நிலைமை சற்றே திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.