அரிசி கொம்பன் யானை தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

தேனி: அரிசி கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மே 27ஆம் தேதி நுழைந்த அரிசிக்கொம்பன் யானை பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் ஓடினர். அப்போது, தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய அரிசிக் கொம்பன் யானை, கம்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிய பால்ராஜ் (65) என்பவரை தாக்கியது.

இதில், பலத்த காயமடைந்த பால்ராஜ், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை நேற்று முன்தினம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அவரது குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அரிசிக் கொம்பன் யானை தாக்கியதில் தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முதல் பலி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.