மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு அறிவுறுத்தல்... 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் விண்ணப்பித்து, மாணவர்கள் தங்களை எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பெயர், அந்த கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், பொறியியல் மாணவர்கள் சேர்க்கை குறியீடு ஆகிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன

அதுமட்டுமின்றி 2019-20 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு அனுமதிக்கபட்ட இடங்கள் குறித்த விவரமும் இந்த பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் இந்த தகவல்களை http://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி இந்த ஆண்டு புதிதாக இடம் பெற விரும்பும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.