அண்ணா பல்கலை., துணைவேந்தர் மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை?

தமிழக அரசு அதிரடி... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டபோது அவருக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் துணை வேந்தர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி, பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டுமென அரசியல் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் சூரப்பாவிற்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், “கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல்வர் தனிப்பிரிவில் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ரூ.200 கோடி வரை நடந்துள்ள ஊழலில் துணை வேந்தர் சூரப்பா, சிசிசி உதவி இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனவும், தற்காலிக ஆசிரியர்கள் ஒருவருக்கு 13-15 லட்சம் ரூபாய் வீதம் 80 கோடி வரை வசூலித்துள்ளனர் என்று புகார் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு அலுவலகத்தில் பல்வேறு வகையில் ஊழல்கள் நடைபெற்றதாகவும், அலுவலக உதவியாளர் பணி உயர்வில் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சி.வரதராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார் எனவும், “சேவ் அண்ணா பல்கலைக் கழகம் என்ற பெயரில் மற்றொரு புகார் பதிவாகி இருந்தது. அதில், சிண்டிகேட் ஒப்புதல் இன்றி சிசிசி இயக்குனராக செல்லதுரையை, கூடுதல் பதிவாளர் அந்தஸ்தில் அமர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது” எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ இறுதியாண்டு மாணவர்கள் தேர்வெழுதாமல் தேர்ச்சி செய்யப்படுவதாக ஏஐசிடிஇக்கு தவறான தகவலை சூரப்பா மெயிலில் அனுப்பினார். சூரப்பா தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய மகளை பல்கலைக் கழகத்தில் பணியில் நியமித்தார் என ஆதிகேசவன் என்பவர் புகார் அளித்தார். செமஸ்டர் தேர்வுகளில் ஆள்மாறாட்டம், நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மறுமதிப்பீடு தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன” என்று சூரப்பா மீதான புகார்கள் அதில் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.