தேயிலை விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க பாஜகவிற்கு ஆதரவு அளியுங்கள் என அண்ணாமலை வலியுறுத்தல்

கூடலூர்: தேயிலை விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும்... நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் தேயிலை விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட போது பேசிய அவர், ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு பாரத பிரதமர் வழங்கிய 6 பரிசு பொருளில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படக்கூடிய தேயிலை தூளும் இடம் பெற்றதாக கூறினார்

நீலகிரி தொகுதி திமுக எம் பி ஆ.ராசா, உள்ளூர் மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசாமல் இந்து தர்மம், சனாதன பிரச்சனைகள், மணிப்பூர் கலவரம் பற்றி பேசி வருவதாக அண்ணமலை விமர்சித்தார்.

தமிழகத்தில் உள்ள திமுகவின் 34 அமைச்சர்களில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாக கூறிய அண்ணாமலை, மத்தியில் பாஜக அமைச்சரவையில் பிரதமருடன் சேர்த்து 79 பேர் உள்ள நிலையில் 9 ஆண்டுகால ஆட்சியில் கடுகளவு கூட ஊழல் புகார் இல்லாத நேர்மையான ஆட்சியை பிரதமர் தந்துள்ளதாக தெரிவித்தார்.