சகதியில் சிக்கிய யானையை நீண்ட நேரம் போராடி மீட்ட மற்றொரு யானை

சத்தியமங்கலம்: நண்பேன்டா... நான் வருவேன்டா... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குட்டை சேற்றில் சிக்கிய யானையை மற்றொரு யானை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

புலிகள் காப்பகத்திலுள்ள ஆசனூர் வனப்பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள அரேப்பாளையம் குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய போது யானை ஒன்றின் கால்கள் சேற்றில் மாட்டிக் கொண்டன.

அந்த யானையை மற்றொரு யானை பின்னாலிருந்து முட்டியும், தந்தத்தால் குத்தியும் பலமணி நேரம் போராடி மீட்ட வீடியோ பதிவு வெளியாகி வைரலானது.

இதை பார்க்கும் பலரும் சந்தானம் படத்தில் வரும் டயலாக்கான நண்பேன்டா என்று பதிவிட்டு வருகின்றனர். எந்த உயிரினமாக இருந்தாலும் தன்னுடன் உள்ளவர்களை காப்பாற்ற தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்.