4 டிரில்லியன் டன் பனிப்பாறைகளை இழந்த அண்டார்டிகா; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை... கடந்த 1994 - ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 4 டிரில்லியன் டன் அளவிலான பனிப்பாறைகளை அண்டார்டிகா இழந்துள்ளதாக என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் . இதனால், கடல் மட்டம் சுமார் 10 அடிவரை உயர்ந்து எல் நினோ, போன்ற கணிக்கமுடியாத அளவில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்றும் எச்சரித்துள்ளனர்.

1994 முதல் 2018 வரையிலான செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டு அண்டார்டிகா பனிப்பாறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு முடிவில், கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகும் வேகம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதையும், அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி மற்ற பகுதிகளைவிட அதிகளவில் உருகிவருவதையும் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகா பனிப்பாறைகளில் பிளவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான துண்டுகளாக உடைந்துள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் அண்டார்டிகா குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது:

“ஒவ்வொரு ஆண்டும் அண்டார்டிகா பில்லியன் டன் கணக்கிலான பனிப்பாறைகளை இழந்து வருகிறது. அதிவேகமாக உருகுதல் நிகழ்வதால் பனிப்பாறைகள் இலகி துண்டுதுண்டாக உடைந்து வருகின்றன.

இதன் விளைவால், கடலில் வெப்ப நீரோட்டம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலிலிருந்து வெப்ப நீரோட்டம் அண்டார்டிகாவை நோக்கி அடியாழத்தில் அதிகளவில் பாய்ந்து மேலெழத் தொடங்கியுள்ளது.

இதனால், எல் நினோ மற்று லா நினா பசிபிக் பெருங்கடலில் அதிகரிக்கவுள்ளது. உலகம் முழுவதும் கணிக்க முடியாத அளவுக்குப் பருவநிலை மாற்றம் நிகழப்போகிறது. இதனால், வழக்கத்துக்கும் அதிகமாக மழைப்பொழிவும், வறட்சியும் உருவாகும். கடல் நீர் மட்டும் அபாயகரமான அளவில் உயரவுள்ளது” என்று எச்சரித்துள்ளனர்.