மாவு அரைக்கும் மில்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மாவு அரைக்கும் மில்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு மில்லில் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட் டது. இது தொடர்பாக முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவு அரைக்கும் மில்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு மாவாக வினியோகம் செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப் பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரகாரம், அம்மாப்பேட்டை, பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாவு அரைக்கும் மில்களில் சோதனை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு அரைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது கும்பகோணத்தில் ஒரு மில்லில் மாவு அரைப்பதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 50 கிலோ எடை கொண்ட 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த அண்ணாதுரை ( 66) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.