ஜம்மு- காஷ்மீரில் ஆக்கிரமிப்புகாரர்களுடன் இணைந்து சமூக விரோத கும்பல் தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும். பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்துவர். இந்திய வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இவர்களது தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, போலீசார் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த ஆக்கிரமிப்புகாரர்கள் சமூக விரோதிகள் சிலருடன் சேர்ந்து கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் மீது கற்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் என 18 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி குல்தீப் சிங் கூறுகையில், ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து சில சமூக விரோதிகள் எங்களுடைய குழுவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களையும் வீசியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.