அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்; முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார். வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் விவசாயிகள், தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.

இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்லாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான். குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன. தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.