வேலியே பயிரை மேய்ந்த கதையாக நகை முகவரை கடத்தி தங்கம் கொள்ளையடித்த ஊர்காவல் படையினர் கைது

சிவகங்கை: வேலியே பயிரை மேய்ந்தது... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நகை முகவரை காரில் கடத்தி சென்று ஒன்றரை கிலோ தங்கம் 2 கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஊர்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் இருந்து நகை பணத்துடன் சென்றபோது காரில் வந்த 4 பேர், போலீஸார் எனக் கூறி நகைகளை பறித்து விட்டு லேனா விலக்கு சுங்கச்சாவடி அருகே அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த கொள்ளை குறித்து விசாரணை செய்த போலீசார் காரின் உரிமையாளரை பிடித்து விசாரித்ததில் அவரது ஓட்டுநர் பால்ராஜ் மற்றும் நண்பர்கள் நாகேந்திரன், சாமுவேல், விஜயகுமார், சரவணன், பெருமாள், சதீஷ்குமார் ஆகியோருடன் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதில் சரவணன் தலைமறைவான நிலையில் 6 பேரை கைது செய்து கார் மற்றும் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.