அசாமில் கனமழை வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

110 பேர் பலியாகி உள்ளனர்... அசாமில் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அஸ்ஸாமின் அண்மையில் பெய்த மழையால் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.

ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திப்ருகார், சிராங், பார்பேட்டா, கோல்பாரா மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் மூழ்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 84 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, முதலமைச்சர் சர்பனந்தா சோனோவாலை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வெள்ள நிலைமையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் கூறியதாக சோனோவால் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், காசிரங்கா தேசியப் பூங்காவில் பெருமளவு நிலப்பரப்பு மூழ்கியுள்ளதால் அங்குள்ள விலங்குகள் பரிதவித்து வருகின்றன. வெள்ளம் காரணமாக வனஉயிரினங்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனிடையே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட விலங்குகள் 108 உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 134 உயிரினங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.