சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல்

சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் பண்டைய நகரமான பல்மைராவுக்கு அருகில், பெரும்பாலும் சிரியா ராணுவமும் ஈரானிய ஆதரவு போராளிகளும் தங்கியிருக்கும் பகுதியில் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றி உள்ளனர். இருப்பினும், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு போராளிகள் விடுப்பு முடித்துவிட்டு, தங்கள் தளத்திற்கு திரும்பி வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவலை மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

பாலைவன பிராந்தியத்தில் குகைகளில் மறைந்திருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள், கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்து நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் நடத்தும் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.