புகுமுக மாணவர்களுக்கு எதிராக பகிடிவதை; விசாரணைகள் ஆரம்பம்

விசாரணைகள் ஆரம்பம்... யாழ்ப்பாண பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கடுமையான பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தகவல்கள் வெளியான நிலையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு கொழும்பில் நடந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இந்த தகவலை வெளியிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் வட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைத்தளங்கள், செயலிகள் ஊடாக நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அச்சறுத்தலும், பகிடிவதையும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பத்தவறும் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் மாணவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசாங்கம் இந்த பகிடிவதை விவகாரம் குறித்து முழுமையான கவனம் செலுத்தியிருப்பதாகவும், விரைவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையின்படி பகிடிவதை காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 1981 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிட்டுச்சென்றுள்ளனர்.

இலங்கை சட்டத்தின் படி பகிடிவதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு மாணவர் பகிடிவதைக்கு உட்பட்டால் அவருக்கு 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனங்களின் பகிடிவதை மற்றும் ஏனைய இன்னல்களை தடைசெய்யும் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உதவியை நாடமுடியும்.