கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

கடலூர்: ஏழாயிரம் போலீசார் பாதுகாப்பு... கடலூர் மாவட்டத்தில் இன்று பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாவட்டத்தில் 7000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்க விரிவாக்கத்திற்காக என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து இன்று (மார்ச் 11) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 7000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஜி கண்ணன் தலைமையில் டிஐஜிக்கள் விழுப்புரம் பாண்டியன், காஞ்சிபுரம் பகலவன் மற்றும் 10 எஸ்பிக்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடலூர், சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.