பீகாரில் கொரோனா நோயாளிகளுக்காக படகு ஆம்புலன்ஸ் சேவை

பீகாரில் வெள்ளத்தின் நடுவே கொரோனா நோயாளிகளுக்காக படகு ஆம்புலன்ஸ் சேவையை மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

சமீபத்திய மழை வெள்ள பாதிப்பின் விளைவாக மாநிலத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதோடு, வெள்ள பாதிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் பீகார் அரசுக்கு உண்டாகியுள்ளது. இதன்காரணமாக வைசாலி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவையை மாநில அரசு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வைசாலி மாவட்டத்தின் ரக்ஹோபூர் வட்டம் தயரா பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு, படகு ஒன்றுதான் வட்டத் தலைநகரம் மற்றும் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு வருவதற்கு ஒரே வழியாகும்.

எனவே மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியின்படி கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு வர படகு ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரக்ஹோபூர் வட்ட அலுவலர் ராணா அக்ஷய் பிரதாப் சிங் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'இந்த படகு ஆம்புலன்ஸ் சேவையானது ஜெதுலி மற்றும் தெடா பகுதிகளுக்கு இடையே நடத்தப்படுகிறது. இந்தப் படகு ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவர், அவரது உதவியாளர் மற்றும் மருத்துவக் குழுவினர் என அனைவருக்கும் பாதுகாப்புக் கவச உடை தயாராக இருக்கும்.

அத்துடன் ஸ்ட்ரக்சர்கள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் என அனைத்தும் இதில் தயாராக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார். இதுவரை இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 2,548 நோயாளிகளில் 1,336 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.