பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் நீரில் மூழ்கி இறப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் தட்டா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கீஞ்சர் ஏரி உள்ளது. கீஞ்சர் ஏரி படகு சவாரி மிகவும் புகழ்பெற்றதாகும். நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கீஞ்சர் ஏரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த ஏரியில் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் படகு ஒன்றில் சவாரி செய்தனர். அப்போது திடீரென படகு ஏரியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

படகு கவிந்ததால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். அதன்பின் இதுகுறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

மீட்பு பணிகள் நடக்கும் முன்பே, அதற்குள் 8 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பின்னர் அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.