ஏற்காடு ஏரியில் மீண்டும் துவங்கியது படகு சவாரி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு காரணமாக ஏற்காடு ஏரியில் படகு சவாரி கடந்த மார்ச் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்பட தோட்டக்கலை துறை பூங்காக்கள் அனைத்தும் கடந்த மாதம் திறக்கப்பட்டன.

ஆனால் ஏற்காடு ஏரியில் பயணிகள் படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதை தொடர்ந்து படகு சவாரியும் தொடங்கப்பட்டுள்ளது.

படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சேலம் மாவட்ட மக்களின் வருகை குறைவாக இருந்தாலும், வெளியூர் பயணிகள் வருகை அதிகம் இருப்பதால் படகு சவாரி களை கட்டியுள்ளது. படகு துறையில் நான்கு மோட்டார் படகுகள் உள்பட 55 படகுகள் சுற்றுலா துறையால் இயக்கப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.