பீகாரில் திருமணத்திற்கு மறுநாள் மணமகன் இறப்பு

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் நகரில் கடந்த மாதம் 15ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் மணமகன் திடீரென இறந்துவிட்டார். அதன்பின் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து உறவினர்கள் உடனடியாக உடலை அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து பாட்னா மாவட்ட கலெக்டருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். மேலும், இறந்துபோன நபரின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. கொரோனா பரிசோதனையில் அவரது உறவினர்கள் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருமண விழா மற்றும் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் என சுமார் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 86 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மணமகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை, அவரது குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், திருமண சடங்குகளை செய்ய வைத்தாக கூறப்படுகிறது.

திருமண விழாவில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்ற விதிமுறையை மீறி இந்த திருமணம் நடைபெற்றுள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் இதுவரை 10043 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.