வழக்கம்போல் பஸ்கள் இயக்கம்... வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று(டிச.,8) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் வழக்கம் போல பஸ், ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் தி.மு.க. - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு ஊழியர்கள்
அனைவரும் இன்று பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலர் சண்முகம் உத்தரவு
பிறப்பித்துள்ளார். பஸ்கள் அனைத்தும் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களும் வழக்கம் போல
இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள்
ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்துள்ளன.
எனவே ஆட்டோக்கள் அதிகம்
இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 'பந்த்' காரணமாக எதிர்கட்சிகள்
போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளன. இதனால் முக்கிய பகுதிகளில்
போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கடைகள்
அடைக்கப்பட்டுள்ளன.