இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 119 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 119 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடி கொரோனா ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது.

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 119 பேர்பலியாகினர். இத்தாலியில் முன்பை விட தினசரி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,735 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,29,327 ஆக அதிகரித்தது. இத்தாலியில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,840 ஆக உள்ளது.

நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,752 ஆக உள்ளது.

நாட்டில் 8,695 பேர் பரிசோதிக்கப்பட்டு தொற்று நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.